விபத்தில் பலியான 2 காவலர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி - முதலமைச்சர் அறிவிப்பு

 
CM

ராசிபுரம் அருகே சாலை விபத்தில் பலியான இரண்டு காவலர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்த காவலர்களின் குடும்பத்திற்கு தலா 25 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கவும் குடும்பத்தைச் சார்ந்த ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார். 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் கட்டுமானப் பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், அந்தப் பகுதியில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட கார் விபத்து குறித்து விசாரிப்பதற்காக: ராசிபுரம் காவல் நெடுஞ்சாலை ரோந்து வாகனம்-49-ல் பணியிலிருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் திரு கோவிந்தன் மற்றும் காவலர் திரு நந்தகோபால் ஆகியோரும், இரவு பாதுகாப்புப் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் திரு சந்திரசேகர், திரு. பழனி மற்றும் காவலர்கள் திரு தேவராஜன், திரு மணிகண்டன் ஆகியோரும் சம்பவ இடத்திற்குச் சென்று மேற்படி கார் விபத்தில் சிக்கிக் தவித்துக் கொண்டிருந்தவர்களை மீட்டு விசாரணை செய்து கொண்டிருந்தனர் அப்போது அங்கு அதிகாலை சுமார் 2-10 மணி அளவில் அதிவேகமாக வந்த டிராவல்ஸ் வேன் ஒன்று அவர்கள்மீது மோதியதில், சம்பவ இடத்திலே சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் திரு, சந்திரசேகர், காவலர் திரு தேவராஜன் ஆகியோர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் காயமடைந்த மற்றொரு காவலர் மணிகண்டன் மற்றும் டிராவல்ஸ் வேனில் பயணம் செய்த 3 பேர்கள் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உரிய சிகிச்சை பெற்று வருகின்றனர்.

cm letter

இந்த விபத்து குறித்துக் கேட்டறிந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு முக ஸ்டாலின் அவர்கள், தொலைபேசியில் தொடர்பு கொண்டு இச்சம்பவத்தில் உயிரிழந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் திரு சந்திரசேகர் மற்றும் காவலர் திரு தேவராஜன் ஆகியோரின் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார். மேலும் மாண்புமிகு சுற்றுலாத் துறை அமைச்சர் திரு.மா. மதிவேந்தன் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கே.ஆர்.என். இராஜேஷ்குமார் மற்றும் காவல் துறை சட்டம் ஒழுங்கு கூடுதல் இயக்குநர் திரு.பி.தாமரைக்கண்ணன் இ.கா.ப., ஆகியோரை நேரில் சென்று உயிரிழந்த காவலர்களுக்கு இறுதி மரியாதை செலுத்தவும், அவர்களது குடும்பங்களுக்கு அறுதல் கூறவம் உத்தரவிட்டுள்ளார். மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்த காவலர்களின் குடும்பங்களுக்கு தலா இருபத்தைந்து இலட்சம் ரூபாய் வழங்கிடவும், அவர்களது குடும்பத்தைச் சார்ந்த ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார். மேலும் இவ்விபத்தில் காயமுற்று சிகிச்சை பெற்று வருவோருக்கு, உயர்தர சிகிச்சை வழங்கிடவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.