தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மக்கள் பாதுகாக்கப்பட்டனர் - முதலமைச்சர் பேட்டி

 
mk stalin

தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மக்கள் மாண்டஸ் புயலில் பாதுகாக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

மாண்டஸ் புயல் நள்ளிரவு 2.30 மணியளவில் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. புயல் கரையை கடக்கும் நேரத்தில் 70 முதல் 80 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. புயல் கரையை கடந்த நேரத்தில் வீசிய பலத்த காற்றின் காரணமாக பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.  சென்னையில் பெய்த கனமழையினால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.   சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட நிவாரண முகாம்களில் 3,600 பேர் தங்கவைப்பட்டுள்ளனர்.
 
இந்நிலையில், சென்னையில் மாண்டஸ் புயல் மற்றும் கனமழையின் காரணமாக பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.  சோழிங்கநல்லூர் மண்டலம், வார்டு-194க்குட்பட்ட ஈஞ்சம்பாக்கம் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 500 உணவுப் பொட்டலங்கள் மற்றும் அரிசி போன்ற மளிகைப் பொருட்களை வழங்கினார். இதேபோல் பெருங்குடி மண்டலம், வார்டு-181க்குட்பட்ட குப்பம் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 3000 உணவுப் பொட்டலங்கள் மற்றும் அரிசி போன்ற மளிகைப் பொருட்களை வழங்கினார். சென்னை காசிமேட்டில் மாண்டஸ் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள், சேதமடைந்த படகுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். சென்னை, ஈஞ்சம்பாக்கம் பகுதியில் மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 500 உணவு பொட்டலங்கள் மற்றும் அரிசி உள்ளிட்ட நிவாரண பொருட்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.  


சென்னை காசிமேட்டில் ஆய்வு செய்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது: இரவு, பகல் பாராமல் பணியாற்றிய அமைச்சர்கள், அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள், தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி. மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாநகராட்சி பணியாளர்கள் விடிய விடிய, சிறப்பாக பணியாற்றினார்கள். பாதிப்புகள் குறித்து விடிய விடிய அதிகாரிகளிடம் கேட்டறிந்தேன். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக புயலால பெரிய அளவு பாதிப்புகள் இல்லை. தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மக்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர். புயல், மழை பாதித்த இடங்களில் இன்று மாலைக்குள் முழுமையாக மீண்டும் மின் விநியோகம் செய்யப்படும். புயல் சேத விவரங்கள் முழுமையாக கணக்கிட்ட பிறகு, உடனடியாக நிவாரணம் வழங்கப்படும். புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கப்படும். தேவைப்பட்டால் ஒன்றிய அரசின் உதவி கோரப்படும் என கூறினார்