காமராஜரின் வருகைக்காக எனது திருமணத்தையே மாற்றினார் கருணாநிதி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 
mk stalin

அரசியல் ரீதியாக மட்டுமின்றி தனிப்பட்ட முறையிலும் காமராசரை மதிப்பவன் நான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 9 ஜோடிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டலின் தலைமையேற்று திருமணத்தை நடத்தி வைத்தார். கட்டில் , மெத்தை , பீரோ உள்ளிட்ட 33  வகையான சீர்வரிசைப் பொருட்களை முதலமைச்சர் வழங்கினார். ஜோடிகளுக்கும் அவர்கள் குடும்பத்தின் பாரம்பரிய முறையில்  தாலி வழங்கப்பட்டுள்ளது. 8 கிராமில் தங்கத் தாலி, பீரோ, கட்டில், பூஜை பொருட்கள், மிக்சி, மெத்தை, எரிவாயு அடுப்பு, தண்ணீர் குடம், ரைஸ் குக்கர், அண்டா, இட்லி குக்கர், மசாலா டப்பா, சாப்பாடு தட்டு, தலையணை, பெரிய தட்டு, டிபன் பாக்ஸ், தேநீர் குவளை, உள்ளிட்ட 33 சீதனங்கள் வழங்கப்பட்டன. 

CM


  
விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: நான் முதல் முறை கொளத்தூர்  சட்ட மன்ற உறுப்பினராகி ஆய்வு நடத்தியபோது இந்த மண்டபம் சமூக விரோதிகளால் பாழடைந்து கிடந்தது. காமராசரால்  1966 ம் ஆண்டு இந்த மண்டபம் திறக்கப்பட்டது. நான் இந்த மண்டபத்தை சீர் செய்ய கூடாது என அரசியல் காழ்ப்புணர்வால் சிலர் வழக்கு தொடர்ந்தனர் , கழக வழக்கறிஞர்கள் மூலம் தீர்ப்பு பெற்று குளிர்சாதனம் , லிப்ட் , பார்க்கிங் வசதியுடன் முழுமையாக மண்டபத்தை கட்டி முடித்துள்ளோம். 700 பேர் வரை மண்டபத்தில் அமர முடியும். சீரமைத்த பிறகும் காமராசர் பெயரிலேயே இந்த  மண்டபம் இருக்கிறது. அவர் திறந்து வைத்ததற்கான கல்வெட்டும் அப்படியே இருக்கிறது. 

அரசியல் ரீதியாக மட்டுமின்றி தனிப்பட்ட முறையிலும் காமராசரை மதிப்பவன் நான் , என் திருமணத்திற்கு நேரில் வந்து வாழ்த்தினார் காமராசர் . கருணாநிதி என் திருமண அழைப்பிதழை காமராசரிடம்  கொடுத்தபோது ஸ்டாலின் சுறுசுறுப்பான இளைஞராக இருப்பதாக கேள்விப்பட்டுள்ளேன் ,   அவரது திருமணத்திற்கு நேரில் வர ஆசைப்படுகிறேன் . ஆனால் எனக்கு உடல் நலம் இல்லையே என்றார் . உடனே கருணாநிதி , நீங்கள் வருவதாக இருந்தால் திருமண மண்டபத்தையே மாற்ற தயாராக இருக்கிறேன் என்றார். அதன்படி காமராசரின் கார் மணமேடைவரை  வருவதற்கு  ஏற்றவாறு, ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட மண்டபத்தில் இல்லாமல், மாற்று மண்டபத்தில் எனக்கு திருமணத்தை  நடத்தி வைத்தார் கருணாநிதி. பாரதிதாசன் கூறியபடி வீட்டிற்கு விளக்காக , நாட்டிற்கு தொண்டராக வாழுங்கள் என வாழ்த்தி விடைபெறுகிறேன். இவ்வாறு கூறினார்.