வாரணாசி- பாரதி வாழ்ந்த புதுப்பிக்கப்பட்ட நினைவு இல்லத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்

 
Mk stalin

மகாகவி பாரதியின் 141வது பிறந்தநாளையொட்டி வாரணாசியில் அவர் வாழ்ந்த புதுப்பிக்கப்பட்ட நினைவு இல்லத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

மகாகவி பாரதியாரின் 141வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது பிறந்தநாளையொட்டி தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், மகாகவி பாரதியாரின் நூற்றாண்டையொட்டி, உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் அவா் வாழ்ந்த இல்லத்தின் அறையை புனரமைத்து பராமரிக்க தமிழ்நாடு அரசின் சார்பில் நிதியுதவி அளிக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்திருந்தார். மேலும், அறையின் முன்புறம் பாரதியாருக்கு வெண்கலச் சிலை அமைக்கவும் தமிழக அரசு முடிவு செய்திருந்தது. வெண்கலச் சிலை அமைக்க ரூ.18 லட்சமும், அறைக்கு மாத வாடகையாக நிகழ் நிதியாண்டுக்கு ரூ.67,500-ம் ஒதுக்கி அரசு உத்தரவிட்டிருந்தது. 


இதைத் தொடா்ந்து, தமிழக அரசின் பொதுப்பணித் துறை சார்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தப் பணிகள் முடிவடைந்த நிலையில், பாரதியார் வாழ்ந்த வீட்டின் அறை புனரமைக்கப்பட்டுள்ளதுடன், 2.5 அடி உயரம் உள்ள சிலையும் நிறுவப்பட்டது. இந்த நிலையில், வாரணாசியில் பாரதியார் வாழ்ந்த புதுப்பிக்கப்பட்ட நினைவு இல்லத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். மேலும் அங்கு அமைக்கப்பட்டுள்ள அன்னாரது மார்பளவுச் சிலையினை திறந்து வைத்தும், மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு சிறப்பு மலரையும் வெளியிட்டார்