CUET PG பொது நுழைவுத்தேர்வு ஜூலை இறுதி வாரத்தில் நடைபெறும் - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

 
cuet

42 மத்திய பல்கலைக்கழகங்களில் முதுகலை படிப்புகளில் சேர நடத்தப்படும் CUET தேர்வு ஜூலை இறுதி வாரத்தில் நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. 

இந்தியாவில் உள்ள JNU, புதுச்சேரி பல்கலைக்கழகம், ஹைதராபாத் பல்கலைக்கழகம் உள்ளிட்ட 42 மத்திய பல்கலைக்கழகங்களில் M.A., M.Com., MBA., M.Sc., உள்ளிட்ட முதுகலை படிப்புகளில் சேர பொதுநுழைவுத் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. வரும் கல்வியாண்டுக்கான  பொதுநுழைவுத் தேர்வுக்கு நேற்று முதல் வரும் ஜூன் 18-ம் தேதி வரை https://cuet.nta.nic.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள 42 மத்திய பல்கலைக்கழகங்கள், இணைப்புக் கல்லூரிகளில் முதுகலை படிப்புகளில் சேர நடத்தப்படும் பொதுநுழைவுத் தேர்வுக்கு, ஒற்றைச் சாளர முறையில் விண்ணப்பிக்கலாம் என்றும், பொது நுழைவுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே சேர்க்கை நடைபெறும் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

இதுவரை மத்திய பல்கலைக்கழகங்கள் தனித்தனியே நுழைவுத் தேர்வுகளை நடத்திவந்த நிலையில், இனி ஒரே நுழைவுத் தேர்வு மட்டுமே நடத்தப்பட உள்ளது. CUET - UG தேர்வைப் போல் CUET - PG தேர்வும் கணினி அடிப்படையிலான தேர்வாக ஜூலை இறுதி வாரத்தில் நடைபெறும் என்றும், தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.