விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு...
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுகவினர் மீது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மாநகராட்சிகள்,நகராட்சிகள்,பேரூராட்சிகளில் சொத்து வரியை குறைந்தபட்சம் 25 சதவீதம் முதல் அதிகபட்சமாக 150 சதவீதம் வரை உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கூட்டணிக் கட்சியான காங்கிரஸும் இந்த முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தன. இதையடுத்து நேற்று சொத்து வரி உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்வைத்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அதிமுக சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.
அந்தவகையில் புதுக்கோட்டையில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் ஏராளமான அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுகவினர் மீது ஓரிரு பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.