"ரேசன் அரிசி கடத்தலை தடுக்க வேண்டும்" - தமிழக முதல்வருக்கு சந்திரபாபு நாயுடு கடிதம்!!
தமிழகத்தில் இருந்து ரேசன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும் என்று ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழகத்தில் பொதுவிநியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக அரிசி வழங்கப்படுகிறது. குடும்ப உறுப்பினர்களை அடிப்படையாக கொண்டு 20 கிலோ முதல் 50 கிலோ வரை அரிசி வழங்கப்படுவதுடன் மண்ணெண்ணெய், கோதுமை, பாமாயில், துவரை பருப்பு உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்படுகின்றன. இவற்றை அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களுக்கு கள்ளச்சந்தையில் விற்பனை செய்ய சில கும்பல் கடத்தி வருவது தொடர்கதையாகி உள்ளது. இதனால் தமிழக குடும்ப அட்டைதாரர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் இருந்து ரேசன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் , தமிழ்நாட்டிலிருந்து ஆந்திரா வழியாக கர்நாடகாவுக்கு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க வேண்டும். வாணியம்பாடி, தும்பேரி ,பேர்ணாம்பட்டு வழியாக அதிகளவில் ரேஷன் அரிசி கடத்தப்படுகிறது. 16 மாதத்தில் 13 வழக்குகள் தனது குப்பம் தொகுதியில் பதிவாகி உள்ளது. எனவே தமிழக முதல்வர் ஸ்டாலின், ரேஷன் அரிசி தமிழகத்திலிருந்து கடத்தப்படுவதை தடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.