சந்திரயான் - 3 வருகிற ஜூன் மாதம் விண்ணில் ஏவப்படும்.. - இஸ்ரோ தலைவர் தகவல்..
சந்திரயான் 3 ராக்கெட் வரும் ஜூன் மாதம் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
ஶ்ரீஹரிகோட்டவில் உள்ள இஸ்ரோவின் சதீஷ்தவான் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து, சரியாக 12:07 மணிக்கு ஜி எஸ் எல் வி - எம் 3 ரக ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. மொத்தமாக 640 டன் எடை கொண்ட இந்த ராக்கெட் இங்கிலாந்தின் ஒன் வெப் - ஏர்டெல் நிறுவனத்தின் வணிக பயன்பாட்டிற்காக 36 செயற்கை கோள்களுடன் விண்ணில் ஏவப்பட்டு நிலையில், சரியாக 1 மணிநேரம் 31 நிமிடங்களில் அதன் சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த இஸ்ரோ தலைவர் சோம்நாத் , 36 செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதன் தொடர்ச்சியாக, சந்திரயான் 3, ககன்யான் என அடுத்தடுத்து 4 அல்லது 5 ராக்கெட்கள் விரைவில் விண்ணில் ஏவப்படும் என்றார். மேலும், குலசேகரப்பட்டினத்தில் இரண்டாம் ஏவுதளம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணி நிறைவடைந்துள்ளதாகவும், அவற்றின் வடிவமைப்பு மற்றும் சுற்றுச்சுவர் போன்ற அடுத்தகட்ட நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார். குலசேகரப்பட்டினம் இரண்டாவது ஏவுதளத்திற்கு சுற்றுச்சுவர் கட்டமைப்புக்காக ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அவை இரண்டு ஆண்டுகளில் செல்பாட்டிற்கு வரும் எனவும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.