பொதுமக்கள் பருவமழை காலங்களில் குடிநீரை காய்ச்சி பருகிட வேண்டும் - சென்னை குடிநீர் வாரியம்

 
chennai water

சென்னை குடிநீர் வாரியம் சார்பில் பொது மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கப்பட்டு வரும் நிலையில் பொதுமக்கள் பருவமழைக் காலங்களில் குடிநீரை காய்ச்சி பருகிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளில் வசிக்கும் 85 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு தினந்தோறும் வழங்கப்படும் 1000 மில்லியன் லிட்டர் குடிநீரில் 11 மெட்ரிக் டன் குளோரின் செலுத்தப்பட்டு பாதுகாப்பான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. சென்னை குடிநீர் வாரியம் சார்பில் கீழ்ப்பாக்கம் நீரேற்று நிலையம், புழல் நீரேற்று நிலையம், சூரப்பட்டு நீரேற்று நிலையம், வீராணம் நீரேற்று நிலையம், செம்பரம்பாக்கம் நீரேற்று நிலையம், நெம்மேலி நீரேற்று நிலையம், மீஞ்சூர் நீரேற்று நிலையம் ஆகிய கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்கள் மூலமாக பொதுமக்களுக்கு தினந்தோறும் 1000 மில்லியன் லிட்டர் பாதுகாப்பான குடிநீர் சீராக வழங்கப்பட்டு வருகிறது.  சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் விநியோகிக்கப்பட்டு வரும் குடிநீரின் தரம் தினந்தோறும் 300 இடங்களில் குடிநீர் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது பருவ மழையின் காரணமாக தினந்தோறும் 600 இடங்களில் குடிநீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 24 ஆயிரத்து 520 இடங்களில் குடிநீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு நீரின் தரம் பரிசோதனை செய்யப்பட்டது.

chennai water

இந்தப் பணிகள் தொடர்ந்து நடை பெறும். மேலும் பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கும் பொருட்டு சென்னை குடிநீர் வாரியத்தால் தினந்தோறும் நீரேற்று நிலையங்கள் மற்றும் 16 குடிநீர் விநியோக நிலையங்களில் 11 மெட்ரிக் டன் குளோரின் செலுத்தப்பட்டு பாதுகாப்பான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.  இந்த நிலையில் 12 லட்சம் குடியிருப்புகளுக்கு இதுவரை 10 லட்சத்து 40 ஆயிரம் குளோரின் மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது. குளோரின் மாத்திரைகள் வழங்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் மழைக் காலங்களில் தொற்று நோய் பரவாமல் இருக்க குடிநீரை பயன்படுத்துவதற்கு முன்பு ஒரு குளோரின் மாத்திரையை 15 லிட்டர் குடிநீருடன் கலந்து 2 மணி நேரம் கழித்து பயன்படுத்த அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது. 

சென்னை குடிநீர் வாரியம் சார்பில் பொது மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கப்பட்டு வரும் நிலையில் பொதுமக்கள் பருவமழைக் காலங்களில் குடிநீரை காய்ச்சி பருகிட வேண்டும். மேலும் உரிய இடைவேளையில் சீரான முறையில் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதால் பொது மக்கள் தேவைக்கு அதிகமாக குடிநீரை சேமித்து வைக்க வேண்டாம். மேலும் குடிநீரை சேமித்து வைக்கும் பாத்திரங்கள, டிரம்கள், மேல் நிலை, கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் ஆகியவற்றை முறையாக சுத்தப்படுத்தி பயன்படுத்த வேண்டும். எனவே பருவ மழையினால் தொற்று நோய் பரவாமல் இருப்பதற்காக சென்னை குடிநீர் வாரியம் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொது மக்கள் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.