அதிமுக அலுவலக வன்முறை - இருதரப்பினருக்கும் போலீசார் சம்மன்

 
admk

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த வன்முறை தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு கடந்த 11ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் சென்ற போது  ஓ. பன்னீர்செல்வம் தரப்பும்,  எடப்பாடி பழனிசாமி தரப்பும் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர்.  இதில் கல்வீச்சு, அடிதடி, கத்திக்குத்து உள்ளிட்ட சம்பவங்கள் ஏற்பட்ட நிலையில் வாகனங்களும்  சேதப்படுத்தப்பட்டது.  50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.  இந்த விவகாரத்தில் தற்போது 14 பேர் கைது செய்யப்பட்டு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ராயப்பேட்டை தலைமை அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் ஏற்பட்ட மோதல் காரணமாக அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.  இதனால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அத்துடன் வருவாய் துறையினர் உடனடியாக தலைமை அலுவலகத்திற்கு வந்து அலுவலகத்தை பூட்டி சீல் வைத்தனர். வேறு எந்தவிதமான அசம்பாவிதங்கள்  நிகழ்ந்து விடக்கூடாது என்பதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதேபோல்   மோதம் சம்பவம் தொடர்பாக  ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர் தலா 200 பேர் மீது  7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் மோதலில் ஈடுபட்டவர்களை கண்டறிவதற்காக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. 

admk office attack

இந்நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த வன்முறை தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களுக்கு சென்னை ராயப்பேட்டை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். அதில், ராயப்பேட்டை காவல் நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் 15க்கும் மேற்பட்டோர் நாளை ஆஜராக வேண்டும் எனவும், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் நாளை மறுதினம் ஆஜராக வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.