"வேற வழி தெரியல.. தயவுசெஞ்சு வாங்கய்யா".. சென்னை மக்களிடம் கெஞ்சும் மாநகராட்சி!
பிரதமர் தேர்தலே நடந்தாலும் சென்னையில் மட்டும் வாக்குப்பதிவு எப்போதும் குறைவாகவே இருக்கும். முதலமைச்சரை தேர்ந்தெடுக்கும் சட்டப்பேரவை தேர்தலிலும் இதே நிலை தான். இவ்வளவு ஏன் முதலமைச்சர் ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் கூட பெரியளவில் வாக்குகள் பதிவாகவில்லை. உள்ளாட்சி தேர்தலில் சென்னைவாசிகளின் அலட்சியத்தை சொல்லவே வேண்டாம். கடைசியாக மாநகராட்சி, நகராட்சி தேர்தல்கள் 2011ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. அவர்களின் பதவிக்காலம் 2016ஆம் ஆண்டே முடிந்துவிட்டது.
அதன்பிறகு, மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிலையில், அதிகாரிகள் நிர்வாகத்திலேயே மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் இயங்கி வருகின்றன. இப்படியிருக்கும் சூழலில் சென்னைவாசிகள் வாக்களிக்க ஓடோடி வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அப்படியெல்லாம் எதிர்பார்க்கவே கூடாது என சொல்லாமல் சொல்லிவிட்டார்கள். ஆம் காலை 9 மணி நிலவரப்படி வெறும் 3.96 சதவீத மக்கள் மட்டுமே தங்களது ஜனநாயக கடமையை ஆற்றியிருக்கிறார்கள். தலைநகரான சென்னையில் தான், மாநிலங்களிலேயே குறைந்த அளவு வாக்குகள் பதிவாகியுள்ளது.
Dear #Chennai!
— Greater Chennai Corporation (@chennaicorp) February 19, 2022
Come out and vote!
1) Find your Polling Station: https://t.co/9BzoEH57lb
2) Go to the polling station with a valid ID card (check previous posts)
3) Vote!#ChennaiCorporation#ChennaiElection#LocalBodyElections2022 pic.twitter.com/GCBaOkr7mo
இச்சூழலில் சென்னை மாநகராட்சி நிர்வாகம் தனது ட்விட்டரில், "அன்பான சென்னை மக்களே வீட்டிக்குள் இருந்தா வெளியே வாருங்கள். வந்து வாக்களியுங்கள். உங்களது வாக்குச்சாவடிகளை இந்த இணையதளத்தில் கண்டுபிடித்து, வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று, சரியான அடையாள அட்டையை காண்பித்து உங்கள் பொன்னான வாக்குகளைச் செலுத்துங்கள்” என குறிப்பிட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஒட்டு மொத்தமாக 8.21 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.