கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்வு

 
Koyambedu


சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதால், இல்லத்தரசிகள் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். 

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து தான் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு காய்கறிகள் சப்ளை ஆகிறது. சென்னை மக்களின் காய்கறி தேவைகளை பூர்த்தி செய்வதிலும் கோயம்பேடு மார்க்கெட் முக்கிய பங்கு வகிக்கிறது. காய்கறிகளின் வரத்து குறையும் போதெல்லாம் விலை அதிகரிப்பதும், வரத்து அதிகரிக்கும் போது விலை குறைவதும் வழக்கமான ஒன்றுதான். இந்நிலையில், தற்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வு எதிரொலியாலும், வடமாநிலங்களில் பெய்த தொடர் மழையின் காரணமாகவும் காய்கறிகள் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது. 

Koyambedu

குறிப்பாக பீன்ஸ், அவரைக்காய் போன்ற காய்கறிகள் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த 30ம் தேதி 6 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளி தற்போது 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் பீன்ஸ் விலை இருமடங்கு உயர்ந்துள்ளது. கடந்த வாரம்.40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ பீன்ஸ் தற்போது 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் கடந்த வாரம் 7 ரூபாய் முதல் 12 வரை விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ வெண்டைக்காய் தற்போது 30 முதல் 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல  கத்தரிக்காய்,  பீர்க்கங்காய், முட்டைக்கோஸ் உள்ளிட்ட காய்கறி விலை கடந்த வாரத்தை காட்டிலும் ரூ.10 உயர்ந்திருக்கிறது. பாகற்காய், பச்சை மிளகாய், முள்ளங்கி, சேனைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு உள்ளிட்டவற்றின் விலை 5 ரூபாய் உயர்ந்திருக்கிறது.  

ஏற்கனவே பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, சொத்து வரி, சமையல் எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது காய்கறிகள் விலையும் உயர்ந்துள்ளது மக்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.