செஸ் ஒலிம்பியாட் : பிரக்ஞானந்தா வெற்றி..
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 10-வது சுற்றில் உஸ்பெகிஸ்தான் வீரரை வீழ்த்தி தமிழக வீரர் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார்.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 186 நாடுகள் பங்கேற்றுள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடந்து வருகிறது. ஜூலை 27ஆம் தேதி தொடங்கிய போட்டிகள் 11 சுற்றுகளாக நடைபெறுகின்றன. இதில் இந்தியா சார்பாக ஆறு அணிகள் பங்கேற்றுள்ளன. பொது பிரிவில் மூன்று அணிகளும் மகளிர் பிரிவில் மூன்று அணிகளும் என மொத்தம் 30 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். 1500க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றுள்ள செஸ் விளையாட்டு போட்டியில் நேற்றுடன் 10-வது சுற்றுகள் நிறைவுபெற்றன.
நேற்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்கிய 10-வது சுற்றில் , ஓபன் பிரிவில் இந்தியா பி அணி உஸ்பெகிஸ்தான் அணியுடன் மோதியது. 10-வது சுற்று ஆட்டத்தில் இந்தியா 2வது அணியில் உள்ள தமிழக வீரர் பிரக்ஞானந்தா உஸ்பெகிஸ்தான் வீரர் சிந்தரோவ் ஜாவோகிருடன் மோதினார். இந்த போட்டியில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 77-வது நகர்த்தலில் சிந்தரோவை வீழ்த்தி வெற்றி பெற்றார்.