சிதம்பரம் நடராஜர் கோயில் குறித்து இன்றும் , நாளையும் கருத்து தெரிவிக்கலாம் - அறநிலையத்துறை அறிவிப்பு..

 
சிதம்பரம் நடராஜர் கோயில் - தமிழக அரசு

 சிதம்பரம் நடராஜர் கோவில் குறித்து கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை இன்றும் நாளையும் பொதுமக்கள்  தெரிவிக்கலாம் என்று இந்து அறநிலையத்துறை  தெரிவித்துள்ளது.  

சிதம்பரம் கோயில்

கடலூரில் உள்ள புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலை பொது தீட்சிதர்கள் நிர்வாகம் செய்து வருகின்றனர். இந்த கோயிலில் கடந்த 7, 8ம்  தேதிகளில் அறநிலையத்துறை சிறப்பு அதிகாரிகள் குழு ஆய்வு மேற்கொண்டது. முன்னதாக  சிதம்பரம் நடராஜர் கோயிலின் வரவு,  செலவு கணக்குகளை காட்டவேண்டும் என்றும், 2 நாட்கள் ஆய்வு நடத்த உள்ளதாகப்வும்   அறநிலையத்துறை அதிகாரிகள் குழு தீட்சிதர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதன்படி சிறப்பு அதிகாரி  சுகுமாரன் தலைமையிலான 5 பேர் கொண்ட குழு ஆய்வு மேற்கொண்டபோது, தீட்சிதர்கள்  ஒத்துழைப்பு வழங்கவில்லை. வரவு செலவு கணக்குகளையும் காட்ட மறுத்த  அவர்கள், நீங்கள்  சட்ட ரீதியான குழு இல்லை என்றும்,  உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்ட குழுவாக இருந்தால் வரவு செலவு கணக்குகளை ஒப்படைப்போம்,  இல்லையேல் நிர்வாக கணக்குகளை காட்ட முடியாது என்றும் தீட்சிதர்கள் திட்டவட்டமாக  மறுத்து விட்டனர்.  

சிதம்பரம் நடராஜர் கோயில்

இதனையடுத்து இதுகுறித்து ஆணையரிடம் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாக, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் குழு  கூறிச்சென்றது.  இதனிடையே சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகம் குறித்து விசாரணை நடத்த பொதுமக்கள் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்கலாம் என இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் ஜோதி அறிவித்திருந்தார். அதாவது,  இன்றும் ( ஜூன் 21 - திங்கட்கிழமை) ,   நாளையும் ( ஜூன் 22- செவ்வாய்க்கிழமை) ஆகிய இரண்டு நாட்கள் பொதுமக்கள் நேரில் சென்றோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது. கடலூர் புதுப்பாளையம் ஆற்றங்கரை தெருவில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் உள்ள துணை ஆணையரிடம் பொதுமக்கள் நேரில் சென்று கருத்துக்களை தெரிவிக்கலாம். அதுமட்டுமின்றி தபால் மூலமாகவும், vocud.hrce@tn.gov.in என்கிற மின் அஞ்சல் மூலமாகவும் மாலை 3 மணிக்குள் கருத்துக்களை அனுப்பலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது