சீனாவில் இருந்து கோவை வந்தவருக்கு கொரோனா - 166 பயணிகள் தீவிர கண்காணிப்பு

 
Covid Positive

சீனாவில் இருந்து சிங்கப்பூர் வழியாக கோவை வந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவருடன் பயணித்த 166 பயணிகளும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 

சீனாவில் புதிதாக பரவி வரும் பிஎஃப் 7 வகை கொரோனா தொற்று உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. அதிவேகத்தில் பரவும் தன்மை கொண்ட இத்தகைய வைரஸால் சீனாவில் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் இந்தியாவிலும் பரவாமல் இருப்பதை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 
 
கோவை  விமான நிலையத்திலும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ரேண்டம் முறையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த விமானத்தில் 167 பயணிகள் வந்து இறங்கினர். அதில் இரண்டு பேர் சீனாவில் இருந்து சிங்கப்பூர் வழியாக வந்தது தெரியவந்ததை தொடர்ந்து, அவர்கள் இருவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவு நேற்று வந்தது. அதில் சேலத்தை சேர்ந்த பயணிக்கு கொரோனா உறுதியானது. மேலும் இவருக்கு எந்தவகையான கொரோனா என்பது குறித்தும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். இதனையடுத்து அவருடன் விமானத்தில் கோவை வந்த 166 பயணிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவர்களை சுகாதாரத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.