சித்ரா பௌர்ணமி: பக்தர்கள் வசதிக்காக தி.மலைக்கு 6,000 சிறப்பு பேருந்துகள்..
சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு ஏராளாமான பக்தர்கள் வருவார்கள் என்பதால், 6000 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு மாத பௌர்ணமி நாளன்றும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். அதிலும் சித்ரா பௌர்ணமி என்றால் மிகவும் விஷேஷமாக கொண்டாடப்படும். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்குப் பின்னர் நடப்பாண்டு சித்ரா பௌர்ணமி சிறப்பாக நடைபெற உள்ளது. இந்த ஆண்டு சித்ரா பௌர்ணமி காலம் வருகிற 16-ஆம் தேதி சனிக்கிழமை அதிகாலை 2.33 மணி முதல் 17-ந்தேதி அதிகாலை 1.16 மணி வரை உள்ளது. இதனையொட்டி பல்வேறு சிறப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதற்காக நேற்று கிரிவலப்பாதை முழுவதும் தூய்மைப்படுத்தப்பட்டன. மேலும் சித்ரா பௌர்ணமி சிறப்பு ஏற்பாடுகள் குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் செய்தியாளர்களிடம் கூறினார். அப்போது சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 25 லட்சம் பக்தர்கள் வருகை புரிவார்கள் என எதிர்பார்ப்பதாக கூறினார். 9 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கவும், பக்தர்கள் வசதிக்காக மருத்துவ முகாம் அமைப்பது, ஆம்புலன்ஸ் வசதி, தீயணைப்பு கருவிகள், 24 மணி நேரம் மின்சார வசதி மற்றும் குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

40 இடங்கள் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறிய ஆட்சியர், இதுவரை அன்னதானம் செய்ய 70 நிறுவனங்கள் முன்பதிவு செய்திருப்பதாகவும், அன்னதானம் செய்ய விரும்புபவர்கள் https://foscos.fssai.gov.in என்ற இணையதளம் மூலமாக வரும் 14-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் குறிப்பிட்டார். அத்துடன் சிறப்பு ரயில் சேவை மற்றும் சென்னை, வேலூர், விழுப்புரம், சேலம், பாண்டிச்சேரி, காஞ்சிபுரம், திருச்சி, கோவை, மதுரை, பெங்களூரு உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து திருவண்ணாமலை வரும் பக்தர்கள் வசதிக்காக 6 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் ஆட்சியர் கூறினார்.


