பிரியாணியில் கரப்பான்பூச்சி - புஹாரி ஓட்டலை இழுத்து மூடிய அதிகாரிகள்!!
சென்னையில் பிரபல உணவகத்தில் பிரியாணியில் கரப்பான் பூச்சி இருந்ததால் 3 நாட்களுக்கு உணவகத்தை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை ஓஎம்ஆர் சாலையில் ஒக்கியம் துரைப்பாக்கம் பகுதியில் புஹாரி ஹோட்டல் ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஹோட்டலுக்கு நேற்று தம்பதி சாப்பிட சென்றுள்ளனர். சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டு கொண்டிருக்கும் போது , அதில் கரப்பான் பூச்சி கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த தம்பதியினர் இதுகுறித்து ஓட்டல் நிர்வாகத்திடம் கூறியுள்ளனர். ஆனால் விஷயத்தை மறைக்க ஓட்டல் நிர்வாகத்தினர் அவர்களை பேசி சமாளிக்க முயன்றுள்ளனர் . அதற்குள் அந்த தம்பதி உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் கொடுத்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் ஓட்டலில் சோதனை நடத்தினர் . அப்போது சமையலறை படுமோசமாக அழுக்குப் படிந்து இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் ஹோட்டல் நிர்வாகத்திடம் இது குறித்து விளக்கம் கேட்டுள்ளனர்.
அத்துடன் பிரியாணியில் கரப்பான் பூச்சி கிடந்தது குறித்த புகாரின் அடிப்படையில் ஓட்டலை மூன்று நாட்கள் மூட உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது. அத்துடன் சமையலறையை சுத்தமாக வைத்திருக்கவும் எச்சரிக்கை விடுத்துள்ளது . மீண்டும் மூன்று நாட்கள் கழித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உணவகத்தில் ஆய்வு மேற்கொள்வர். அதன் பிறகே ஓட்டலை திறக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அழுக்கு படிந்து பராமரிப்பின்றி ஆபத்தான முறையில் உணவு சமைத்து வாடிக்கையாளருக்கு கொடுத்த புகாரின் பேரில் ஓட்டலுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.