வாடகை தாய் விவகாரம் - நயன்தாரா, விக்னேஷ் சிவன் மீது போலீசில் புகார்

 
Nayan

வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற விவகாரம் தொடர்பாக நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.  
 
பிரபல நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோர் கடந்த ஜூன் மாதம் 9ம் தேதி திருமணம் செய்துகொண்டனர். திருமணம் ஆகி 4 மாதங்களே முடிந்துள்ள நிலையில்,  விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் இரண்டு குழந்தைகளுக்கு நாங்கள் பெற்றோர் ஆகியுள்ளோம் என பதிவிட்டு இருந்தார். அவர்கள் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றுக்கொண்டது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சர்ச்சை பல்வேறு கோணங்களிலும் விவாதிக்கப்பட்டு வருகிறது. வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமானால் சில சட்ட விதிகள் நடைமுறையில் உள்ளன. ஆனால் நடிகை நயன்தாரா இந்த விசயத்தில் அனைத்து விதிகளையும் மீறி இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.  இதனை தொடர்ந்து நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியின் இரட்டை ஆண் குழந்தை விவகாரத்தில் சுகாதாரத்துறை இணை இயக்குநர் தலைமையிலான 3 பேர் கொண்ட குழு விசாரணை அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் வாடகை தாய்க்கு எந்த மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது?, தமிழகத்தில் தான் சிகிச்சை பெற்றாரா? தமிழக மருத்துவமனை என்றால் உரிய நடைமுறை பின்பற்றப்பட்டதா என விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணைக் குழுவினர் ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருப்பதாகவும், தேவைப்பட்டால் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனிடம் விசாரணை நடத்தப்படும் எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து இருந்தார். 

nayan wikki

இந்நிலையில், வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற விவகாரம் தொடர்பாக நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அரசு விதிமுறைகளை மீறி நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நயன்தாரா, விக்னேஷ் சிவன், சிகிச்சை பார்த்த மருத்துவர்கள், வாடகை தாய் ஆகியோரை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.