அதிமுக உட்கட்சி விவகாரத்தை நீதிமன்றம் தீர்மானிப்பது ஏற்புடையதல்ல - கார்த்தி சிதம்பரம்

 
karthik chidambaram

அதிமுக உட்கட்சி விவகாரத்தை நீதிமன்றம் தீர்மானிப்பது ஏற்புடையதல்ல என காங்கிரஸ் எம்.பி.கார்த்தி சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். 

பழனி முருகன் கோவிலில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் சாமி தரிசனம் செய்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: அ.தி.மு.க. தலைவர்களிடையே ஒற்றுமை இல்லை. தலைமை போட்டிக்கு வரும் போது உறுப்பினர்களே முடிவு செய்ய முடியும். நீதிமன்றம் அதனை தீர்மானிப்பது ஏற்புடையது அல்ல. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுறுசுறுப்பாக வெளிப்படையான முதலமைச்சராக செயல்படுகிறார். இதனால் மக்களிடம் அவருக்கு நாள் தோறும் மதிப்பு அதிகரித்து வருகிறது.

மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு ஏழை எளிய மக்களை பற்றி கவலைப்படாமல் செயல்படுகின்றனர். பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி. வரி விதிப்பை தொடர்ந்து எரிபொருட்களின் விலை உயர்வால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுகின்றனர். கொரோனா காலகட்டத்தில் மக்களுக்கு சரியான முறையில் மத்திய அரசு நிதி வழங்கவில்லை. தற்போது சுங்க கட்டணத்தை தொடர்ந்து உயர்த்தி வருகின்றனர். ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வால் கனரக வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இது மேலும் சுமையை ஏற்படுத்தும். இவ்வாறு கூறினார்.