காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதி
காய்ச்சல் காரணமாக காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனான கார்த்தி சிதம்பரம், அதில் வெற்றி பெற்று மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டார். தற்போது சென்னையில் உள்ள அவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் நேற்று இரவு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். மருத்துவர்களின் பரிசோதனையில் கார்த்திக் சிதம்பரத்திற்கு இருப்பது சாதாரண காய்ச்சல் தான் என்பது தெரியவந்துள்ளது. இருப்பினும் கார்த்திக் சிதம்பரத்திற்கு இன்று கூடுதலாக சில பரிசோதனைகளை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசோதனைகளை முடித்துவிட்டு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகும் கார்த்திக் சிதம்பரம், வருகிற 18ம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற கூட்ட தொடரில் பங்கேற்பதற்காக நாளை மாலை டெல்லி புறப்பட்டு செல்வார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.