சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா - ராதாகிருஷ்ணன் கடிதம்!!
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 98 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 55 ஆயிரத்து 474 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 44 பேர் , செங்கல்பட்டில் 46 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 16 ஆயிரத்து 907 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் தமிழகத்தில் இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 38,025ஆக உள்ளது. தமிழகம் முழுவதும் 542 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். நீண்ட நாட்களுக்கு பிறகு கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 500ஐ கடந்தது சுகாதாரத்துறைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. எனவே நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட நிர்வாகங்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். ஏப்ரல் 15ஆம் தேதி நிலவரப்படி 22ஆக இருந்த பாதிப்பு, தற்போது 100ஆக பதிவாகி வருகிறது. தொடர்ந்து அடுத்தடுத்த நாட்கள் மற்றும் வார இறுதிகளில் பாதிப்புகள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.