கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை - முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை!!
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு தளர்வுகள் தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 52 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 52 ஆயிரத்து 442 ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம் கொரோனா வைரஸ் பாதிப்பினால் கடந்த 24 மணி நேரத்தில் யாரும் உயிரிழக்கவில்லை. இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 38,025 ஆக உள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் சில நாடுகளில் தொற்று அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை செய்து வருகிறார்.தலைமை செயலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இதனிடையே கொரோனா 4ம் அலை வருமா என்று தெரியவில்லை; ஆனால், அவற்றிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா விதிமுறைகளை இன்னும் 3 மாதங்களுக்கு கடைபிடிக்க வேண்டும்; தொற்றில் இருந்து விடுபட்டு விட்டோம் என நினைக்க வேண்டாம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.