வைத்திலிங்கத்திற்கு கொரோனா தொற்று உறுதி!!
அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நேற்று 1,461 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் கொரோனாவால் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 34,69,805 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரேநாளில் 697 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் இதுவரை 34,23,557 பேர் குணமடைந்துள்ளனர். அதேபோல் கொரோனா தொற்றால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 38,026 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும் , ஓபிஎஸ் ஆதரவாளருமான வைத்திலிங்கத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஈபிஎஸ் தரப்பில் சிலருக்கு கொரோனா கண்டறியப்பட்ட நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கத்திற்கும் கொரோனா இருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. தொற்று ஏற்பட்டதை அடுத்து வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டார் வைத்திலிங்கம். முன்னதாக முன்னாள் சபாநாயகர் தனபால் , முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூக்கும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் எடப்பாடி பழனிசாமியின் மனைவிக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் சிலருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், அவருக்கு பாதுகாப்பு அளிக்கும் சிஆர்பிஎஃப் வீரர்களுக்கும் தற்போது கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.