"அந்த லிங்க்க கிளிக் பண்ணிடாதீங்க" - மக்களுக்கு சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை!
எந்தவொரு கொள்ளை நோய் வந்தாலும் மக்களிடம் கொள்ளையடிக்கும் கும்பலும் சேர்ந்தே வந்துவிடும். கடந்த இரண்டாண்டுகளான கொரோனா பெருந்தொற்றை முன்வைத்து பல்வேறு மோசடி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. கொள்ளை கும்பலின் தற்போதைய ஆயுதம் ஒமைக்ரான். இலவசமாக ஒமைக்ரான் பரிசோதனை செய்கிறோம் எனக்கூறி மக்களிடம் பணத்தை வாரி சுருட்டுகிறது. தற்போது இதுதொடர்பாக தமிழ்நாடு காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
காவல் துறையின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில், "ஒமைக்ரான் கேஸ்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே இருக்கிறது. இதனை முன்வைத்து இணைய வழி (சைபர்) குற்றங்களும் தற்போது மையம் கொண்டுள்ளன. சைபர் குற்றவாளிகள் அப்பாவி குடிமக்களை ஏமாற்றுவதற்கு பல்வேறு தந்திரங்களைப் பின்பற்றுகிறார்கள். மோசடி செய்பவர்கள் அரசு மற்றும் தனியார் சுகாதார மையங்கள் என்ற போர்வையில் தீங்கிழைக்கும் லிங்க்குகளை ஒமைக்ரானுக்கான RT-PCR பரிசோதனை என இமெயில் மூலம் அனுப்புகிறார்கள்.
அந்த லிங்கை கிளிக் செய்த உடன் போலியான இணையதளத்திற்கு உங்களை அழைத்துச் செல்கிறது. அதன்பிறகு உங்களின் அனைத்து தனிப்பட்ட தகவல்களையும் நிரப்பும்படி அந்த இணையதளம் மூலம் வற்புறுத்துகிறார்கள். மேலும் பதிவுக் கட்டணமாக ஒரு சிறிய தொகையையும் கேட்கிறார்கள். இதன் மூலம் மக்களின் வங்கி விவரங்களை கைப்பற்றி, வங்கியிலிருந்து பணத்தைச் சுருட்டுகிறார்கள். ஆகவே அவர்களிடம் மக்கள் உஷாராக இருக்க வேண்டும். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தில் பரிசோதனை செய்யுங்கள்.
அதேபோல யார் எந்த லிங்கை அனுப்பினாலும் அதன் நம்பகத்தன்மையை சரிபார்த்து, அறியப்படாதவர்களிடமிருந்து வரும் லிங்குகளை கிளிக் செய்வதைத் தவிர்க்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட அரசு/தனியார் சுகாதார சேவைக்கான இணையதளத்தில் சரிபார்க்க வேண்டும். போலியான லிங்குகள் பெரும்பாலும் அதிகாரப்பூர்வமான வார்த்தைகளோடு கூடுதல் வார்த்தைகளை இணைத்தோ எழுத்துப் பிழையுடனோ இருக்கும். இணையதள முகவரி https:// உடன் தொடங்குகிறதா என்பதை மக்களை உறுதிசெய்ய வேண்டும்.
சைபர் கிரிமினல்கள் ஆதார், பான் கார்டு மற்றும் மொபைல் எண் விவரங்களைப் பல வழிகளில் பயன்படுத்த முடியும் என்பதால், உங்கள் டிஜிட்டல் ஆவணங்களை கவனமாகப் பாதுகாக்க வேண்டும். இது போன்ற மோசடியில் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால், https://cybercrime.gov.in/ என்ற வலைதளத்தில் புகார் அளிக்கலாம். இணையப் புகார்களைப் பதிவு செய்வதில் உதவிக்கு 155260 என்ற இலவச எண்ணையும் பயன்படுத்தலாம். இது ஒரு பொதுவான எச்சரிக்கை மட்டுமே” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.