மெரினா கடற்கரையில் சிறுவனுக்கு முதலுதவி அளித்த டிஜிபி சைலேந்திர பாபு - குவியும் பாராட்டு!
சென்னை மெரினா கடற்கரையில் நீரில் மூழ்கிய சிறுவனுக்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு முதலுதவி அளித்து உதவிய சம்பவம் அனைவரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.
பொதுவாகவே மாலை நேரங்களில் மெரினா கடற்கரையில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் வழக்கத்தை விட மக்கள் அதிக அளவு வந்திருந்தனர். தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபுவும் மாலை 6 மணி அளவில் சாதாரண உடையில் மக்களுடன் மக்களாக கடற்கரையில் வலம் வந்துகொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கடலில் விளையாடிக்கொண்டிருந்த 10 வயது சிறுவன் முகேஷ் கடலில் இழுத்துச் செல்லப்பட்டார். உடனே உறவினர்கள் கூச்சலிடவே அங்கிருந்த சிலர் கடலுக்குள் குதித்து சிறுவனை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். ஆனால் சிறுவன் மூச்சு பேச்சு இல்லாமல் இருந்துள்ளான். மக்கள் கூட்டமாக இருப்பதை பார்த்த டிஜிபி, அங்கு சென்று சிறுவனுக்கு முதலுதவி அளித்தார்.
நெஞ்சில் கையை வைத்து அழுத்தியும், முதலுதவி அளித்ததும் சிறுவன் கண்ணை திறந்து பார்த்தான். அங்கு இருந்த சிலர் சிறுவனுக்கு குடிக்க தண்ணீர் கொடுக்க முன்வந்துள்ளனர். ஆனால் டிஜிபி சைலேந்திரபாபு இது போன்ற சூழலில் தண்ணீர் கொடுக்கக் கூடாது என கூறி அவற்றை வாங்கி சிறுவனின் தலையில் ஊற்றி ஆசுவாசப்படுத்தினார். பின்னர் உடனடியாக ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யுமாறு அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களுக்கு உத்தரவிட்ட அவர், கடற்கரை மணலில் பயணிக்கும் சிறிய வாகனத்தை வரவழைத்து , சிறுவனை அந்த வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி உத்தரவிட்டார். அதன்பின்னரே அங்கு கூடியிருந்தவர்களுக்கு அவர் அவர் தமிழக காவல்துறை டிஜிபி என்பது தெரிய வந்தது. துரிதமாக செயல்பட்டு சிறுவனுக்கு முதலுதவி அளித்த டிஜிபி-க்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.