சென்னையில் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் காவலருக்கு ரூ. 1 லட்சம் பரிசு - சைலேந்திர பாபு அறிவிப்பு..
சென்னையில் தனியார் வங்கியில் கைவரிசை காட்டிய கொள்ளையர்களை கைது செய்யும் காவலர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என டிஜிபி சைலேந்திரபாபு அறிவித்துள்ளார்.
சென்னை அரும்பாக்கம் ரசாக் கார்டன் பகுதியில் பெடரல் தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் நகை அடகு வழங்கும் அலுவலகத்தில் நேற்று பிற்பகலில் கத்தி முனையில் கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்த வங்கியில் ஏற்கனவே பணியாற்றிய மக்கள் தொடர்பு அதிகாரியும், மண்டல மேலாளர் முருகன் என்பவரே இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியிருக்கிறனர். முதலில் வங்கியின் காவலாளிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்தை கொடுத்து அவரை கட்டிப்போட்டுவிட்டு, மேனேஜர் மற்றும் ஊழியர்களை கழிவறையில் பூட்டி வைத்துவிட்டு கொள்ளையடித்திருக்கின்றனர்.
வங்கியின் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த ரூ. 15 கோடி மதிப்பிலான மொத்தம் 32 கிலோ தங்க நகைகளை எடுத்துக்கொண்டு , பின்னர் கழிவறையில் இருந்த ஊழியர்களை ஸ்ட்ராங் ரூமில் அடைத்துவிட்டு தப்பி சென்றுள்ளனர். 3 பேர் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. போலீஸிடம் சிக்கி விடக்கூடாது என்பதற்காக வங்கியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியின் தரவுகளையும் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
இந்த கொள்ளை சம்பவம் சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து கொள்ளையர்களை பிடிக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். வங்கிக் கொள்ளை கும்பலை பிடிக்க சென்னை அருகே உள்ள மாவட்டங்களில் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கொள்ளையர்களை கைது செய்யும் காவலர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என டிஜிபி சைலேந்திரபாபு அறிவித்திருக்கிறார்.