மனைவியுடன் வந்து வாக்களித்தார் திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின்
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் வாக்களித்தார்.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கான தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் சுமார் 2 கோடியே 83 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். அத்துடன் 30,735 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு 1. 60 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி இன்று பொதுவிடுமுறை அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 9காலை மணிநேர நிலவரப்படி, ஒட்டு மொத்தமாக 8.21 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. மாநகராட்சிகளில் 5.78 சதவீதமும், நகராட்சிகளில் 10.32 சதவீதமும் , பேரூராட்சிகளில் 11.74 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையர் பழனி குமார் தெரிவித்துள்ளார்
இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் எஸ்ஐஇடி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ வாக்களித்தார். அவருடன் வந்திருந்த அவரது மனைவி கிருத்திகா உதயநிதியும் வாக்களித்து தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். முன்னதாக சென்னை தேனாம்பேட்டை வாக்குச்சாவடியில் முதல்வர் மு.க. ஸ்டாலின், தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் வந்து தனது வாக்கினை பதிவு செய்தார்.