ஆன்லைன் சூதாட்டத்தை தடைசெய்ய த.மா.கா-வினர் இதை செய்ய வேண்டும் - ஜி.கே.வாசன் கோரிக்கை..

 
 ஜி.கே.வாசன்

ஆன்லைன் சூதாட்டத்தை முற்றிலும் தடைசெய்ய வேண்டும் என்று தங்கள் கருத்துகளை த.மா.காவினர் பதிவு செய்ய வேண்டும்  எனவும்,  அதோடு பொது மக்களிடம் விழிப்புணர்வை  ஏற்படுத்த வேண்டும் என்றும் அக்கட்சித் தலைவர் ஜி.கே. வாசன்  கேட்டுக்கொண்டுள்ளார்.  

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தையும் , சொத்தையும் , இழந்து 28 பேர்களுக்கு மேல் உயிரிழந்துள்ளனர் . ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகளும் , பொதுநல அமைப்புகளும் , பொதுமக்களும் அரசிற்கு கோரிக்கை வைத்துள்ளது . தற்பொழுது தமிழக அரசு சார்பாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை கூடுதல் தலைமை செயலாளர் அவர்கள் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அல்லது ஓழுங்குப்படுத்த மக்களிடம் கருத்து கேட்பதற்காக homeses@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியை அறிவித்துள்ளது .  

ஆன்லைன் சூதாட்டம்

ஆன்லைன் சூதாட்டத்தை ஒழுங்குப்படுத்த வேண்டும் என்ற பேச்சிற்கே இடம் இல்லை அவை முற்றிலுமாக தடை செய்யப்பட வேண்டிய ஒன்று . இதனால் பல ஆயிரம் குடும்பங்கள் நேரிடையாகவும் , மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர் . இவற்றில் பலபேர் பணத்தை இழந்து , சொத்தை இழந்து , சமுதாயத்தில் மரியாதையை இழந்து , இலட்சக் கணக்கில் கடன்வாங்கி திரும்ப செலுத்த முடியாமல் பண நெருக்கடியில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் . 

கடந்த ஒரு வருடத்திற்குள் சுமார் 28 பேர் தங்கள் இன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர் . இதனால் பல குடும்பங்கள் தலைவனை , மகனை , சகோதரனை இழந்து , பொருளாதாரத்தை இழந்து தவிக்கின்றனர் . தங்கள் வளரும் இளைஞர்களையும் , படிக்கும் மாணவர்களையும் , குறுக்குவழியில் அதிக பணம் சம்பாதிக்க , அவர்கள் மனதில் ஆசையை தூண்டி , மாய வலையில் வீழ்த்தும் இணையவழி சூதாட்டங்கள் மற்றும் விளையாட்டுகள் வருங்கால சந்ததியினரை தீய வழியில் கொண்டு சென்று அடியோடு அழித்துவிடும் .

ஆன்லைன் ரம்மி

சூதாட்டத்தால் பணத்தை இழந்து அவற்றை ஈடுகட்ட கொள்ளை , கொலை என்று இளைய சமுதாயம் சீரழிவை நோக்கி திரும்பிகொண்டு இருக்கிறது . அவற்றை முற்றிலுமாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் . அதனால் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக நமது இயக்கத்தை சேர்ந்த மாவட்டத் தலைவர்கள் , மாநில , மாவட்ட நிர்வாகிகள் , துணை அமைப்பு தலைவர்கள் , நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட வேண்டும் என்று தங்கள் கருத்துகளை homesec@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியில் வருகிற 12.08.2022 மாலை 5 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும் . அதோடு தாங்கள் இது தொடர்பாக பொது மக்களிடம் விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும்” என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.