மேட்டூர் அணையிலிருந்து மேலும் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்கவும் - டிடிவி தினகரன்..

 
TTV

மேட்டூர் அணையிலிருந்து  சம்பா சாகுபடிக்கு  மேலும் 15 நாட்களுக்கு  தண்ணீரைத் திறக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு  அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “கடந்த ஆண்டு மேட்டூர் அணையிலிருந்து மே 24ஆம் தேதி பாசனத்திற்காக நீர் திறந்தபொழுதும், மழை வெள்ள பாதிப்புகளால் சம்பா சாகுபடி ஒரு மாத காலம் தாமதமாக தொடங்கியதால் பயிர்கள் இன்னும் அறுவடைக்கு தயார் நிலையை எட்டவில்லை. இந்நிலையில் வழக்கமான நிகழ்வாக ஜனவரி 28ஆம் தேதியே தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டிருப்பது, டெல்டா விவசாயிகளை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

mettur dam

சம்பா சாகுபடி நிறைவடையாத நிலையில், சுமார் 2 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்புக்குள்ளாகும் என்பதால், விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று மேலும் 15 நாட்களுக்கு தண்ணீரைத் திறக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.