கடல் சீற்றம் - மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பாதை சேதம்
மாண்டஸ் புயல் காரணமாக ஏற்பட்ட கடல் சீற்றத்தால் சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை உடைந்து சேதம் அடைந்துள்ளது
வங்கக்கடலில் உருவான 'மாண்டஸ்' புயல் தீவிரம் அடைந்து, வட தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகர்ந்து தற்போது புயலாக வலுவிழந்திருப்பதாக வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. சென்னைக்கு தென்கிழக்கே 260 கிலோமீட்டர் தொலைவிலும், காரைக்காலுக்கு வடகிழக்கே 180 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டிருப்பதாகவும், மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில் மாண்டஸ் புயல் மெல்ல வடமேற்கு திசையில் நகர்ந்து கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாண்டஸ் புயல் காரணமாக மெரினா கடற்கரையில் கடல் சீற்றம் அதிகரித்துள்ள நிலையில், இதன் காரணமாக மெரினா கடற்கரையில் 1.14 கோடியில் மரப்பலகையால் அமைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை உடைந்து சேதம் அடைந்துள்ளது. குறிப்பாக கடலுக்கு அருகில் உள்ள பாதை பலத்த சேதம் அடைந்துள்ளது. "சேதமடைந்த சிறப்பு பாதை விரைவில் சீர் செய்யப்படும்" என்று சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.