கொலை மிரட்டல், பண மோசடி-: எஸ்.ஏ.சியிடம் மீண்டும் விசாரணை
திரைப்பட இயக்குநரும் பிரபல நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ. சந்திரசேகர் மீது பண மோசடி மற்றும் கொலை மிரட்டல் புகார் கூறப்பட்டிருக்கிறது. இதை அடுத்து மீண்டும் விசாரணை நடத்த இருக்கிறது காவல்துறை.
எஸ். ஏ. சந்திரசேகர் டிராபிக் ராமசாமி என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் திரைப்பட வெளியீட்டு உரிமையை வழங்குவதாக சொல்லி வெளிநாடு வாழ் இந்தியரான பிரம்மானந்தம் சுப்பிரமணியம் என்பவரிடம் 21 லட்சம் பணம் பெற்றதாக அவரது தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் சொன்னபடி வெளியிட்டு உரிமையை தனக்கு வழங்காமல் எஸ். ஏ. சந்திரசேகர் அவராகவே வெளியிட்டு விட்டதாக குற்றச்சாட்டில் கூறியிருக்கிறார் பிரம்மானந்தம் .
தன்னை மோசடி செய்து விட்டதால் பிரம்மானந்தம் சார்பில் அவரது நண்பரும் தயாரிப்பாளருமான மணிமாறன் சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் பின்னர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திலும் கடந்த 2019 ஆம் ஆண்டில் புகார் அளித்துள்ளார்.
இதை அடுத்து சிவில் நீதிமன்றத்திலும் கடந்த 2020 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார்மணிமாறன். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் எஸ். ஏ. சந்திரசேகர் வாங்கிய பணத்திற்கு வட்டியுடன் சேர்த்து 27 லட்சம் ரூபாய் பிரம்மானந்தம் சுப்பிரமணியம் என்பவருக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. அதன் பின்னரும் எஸ்.ஏ.சந்திரசேகர் பணத்தை கொடுக்காமல் தனக்கும் தனது வெளிநாட்டு வாழ் நண்பர் பிரம்மானந்தம் சுப்பிரமணியத்திற்கும் கொலை மிரட்டல் விடுத்து வருகிறார் என்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் மணிமாறன்.
இந்த வழக்கை விசாரித்த சைதை நீதிமன்றம் மணிமாறன் மற்றும் எஸ். ஏ. சந்திரசேகர் ஆகியோரிடம் மீண்டும் விசாரணை விசாரணை நடத்த வேண்டும் என்று விருகம்பாக்கம் போலீசாருக்கு உத்தரவிட்டது. இதை அடுத்து சந்திரசேகர் மீதான பண மோசடி, கொலை மிரட்டல் புகாரில் மீண்டும் விசாரணை நடத்த இருக்கிறது விருகம்பாக்கம் போலீஸ்.