7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம்..
பணிக்கு வந்த அனைத்து தொழிலாளர்களுக்கும் பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கம் ( சிஐடியு) சார்பில் சென்னையில் உள்ள அனைத்து பணி மனைகள் முன்பும் இன்று அதிகாலை ஆர்பாட்டம் நடைபெற்றது
சென்னை பல்லவன் இல்லம் மத்திய பணிமனை முன்பு, இன்று அதிகாலை 50 மேற்பட்ட போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.. குறிப்பாக , பணி கிடைக்காமல் திரும்பும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு மாற்று பணி வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்யாமல் ஊழியர்களுக்கு ஆப்சென்ட் போட்டு சம்பளத்தை பறிக்கக் கூடாது என்று கேட்டுக்கொண்டனர்.
மேலும், ஒவ்வொரு நடைக்கும் ஏற்கனவே நேர அட்டவணையில் உள்ளபடி ஓய்வு நேரத்தை வழங்க வேண்டும் என்றும், சொசைட்டி கடன் மனுவில் நிர்வாகம் கையொப்பமிட வேண்டும் அல்லது நிர்வாகமே ஊழியர்களுக்கு கடன் தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர். இந்த விவகாரத்தில் தமிழக அரசின் தலையிட்டு தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று ஊழியர்கள் கோஷங்களை எழுப்பினர்.