தமிழக மீனவர்கள் 21 பேரின் காவல் பிப் 21 வரை நீட்டிப்பு... இலங்கை நிதிமன்றம் உத்தரவு..
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் காவலை பிப்ரவரி 21 ஆம் தேதி வரை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அவ்வப்போது கைது செய்வது வாடிக்கையாகி வருகிறது. அதோடு மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது, மீன்பிடி உபகரணங்களை சேதப்படுவது , படகுகளை சிறைபிடிப்பது என இலங்கை கடற்படையின் அத்துமீறலும், அட்டூழியமும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. அந்தவகையில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் 21 பேரை கைது செய்தனர்.
நாகை மற்றும் காரைக்காலைச் சேர்ந்த மீனவர்கள் 400 க்கும் மேற்பட்டோர் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அவர்களில் 2 விசைப்படகுகளை சுற்றிவளைத்த இலங்கை மீனவர்கள் , படகிலிருந்த 21 மீனவர்களையும் சிறைபிடித்தனர். பின்னர் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் 21 பேரையும் கைது செய்து காங்கேசன் துறைமுகத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதுவரை இலங்கை கடற்படை தான் தொடர்ந்து தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் செய்து வந்தது. ஆனால் இந்த விவகாரத்தில் இலங்கை மீனவர்கள் தமிழக மீனவர்களை சிறைபிடித்து, அந்நாட்டு கடற்படையிடம் ஒப்படைத்திருக்கின்றனர். இந்த சம்பவம் மீனவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் முன்னதாக பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 21 மீனவர்களுக்கு பிப்ரவரி 7 ஆம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டப்பட்டது. இன்றுடன் அது முடியவடைய உள்ள நிலையில், மீண்டும் அவர்கள் இன்று பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மீனவர்களின் காவலை பிப்ரவரி 21 ஆம் தேதி வரை நீட்டித்து இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.