நெருங்கும் தீபாவளி.. குவியும் மக்கள்.. - தி.நகரில் கண்காணிப்பு தீவிரம்..
தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னை தியாகராய நகரில் கூட்ட நெரிசலில் திருட்டில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டறிய கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.
நெருங்கி வரும் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக புத்தாடைகள், பட்டாசு , வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக சென்னை மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் தி.நகர் பகுதியில் குவிந்துள்ளனர். அங்கு நிலவும், போக்குவரத்து நெரிசல் பொதுமக்களுக்கு இடையூறு, பாதுகாப்பு ஏற்பாடுகள் எவ்வாறு உள்ளது என்பது குறித்து , காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நடந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரியிடம் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த காவல் ஆணையர் சங்கர் ஜிவால், “பாண்டி பஜார், தி நகர், மாம்பலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். பொது மக்களுக்கு பயன்பெறும் வகையில் MAY I HELP YOU DESK போடப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை குறைக்க ஆட்டோ மற்றும் கார்களுக்கு தனி வழி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், முதல்முறையாக தியாகராய நகரில் 6 , FRC கேமரா பொருத்தப்பட்டுள்ளது. கூட்டத்தில் குற்றவாளிகளைக் கண்டறிவதற்காகக் குற்றப்பிரிவு போலீசார் மப்டியில் உள்ளனர்.
இந்த கேமராக்கள் மூலம் பில்டர் செய்து ஏற்கனவே குற்றங்கள் அவர்கள் மீது உள்ளதா என்பது குறித்துக் கண்டறியவும் உதவியாக இருக்கும். அதற்கான முழு முயற்சியிலும் குற்றவாளிகளைப் பிடிப்பதற்காக ஈடுபட்டுள்ளனர். வழக்கத்திற்கு மாறாக 50 கேமராக்கள் கூடுதலாக போடப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள 250 கேமராக்களுடன் சேர்த்து மொத்தம் 300 கேமராக்கள் மூலம் தியாகராய நகர், பாண்டி பஜார் ரங்கநாதன் தெரு பகுதிகல் கண்காணிக்கப்பட்டு வருகிறது. 3 இடங்களில் உயர் கோபுரங்கள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் பொருட்டு குறிப்பிட்ட வாகனங்கள் மட்டுமே
தியாகராய நகர் பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட வருவகின்றன. மேலும் தியாகராய நகர் பகுதி சுற்றி போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால் வாகன நெரிசல் குறையும்” என்று தெரிவித்தார்.