டாக்டர் சுப்பையா சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்தது ஹைகோர்ட்.. விசாரணையை 12 வாரங்களில் முடிக்கவும் உத்தரவு..
அரசியல் இயக்கத்துடன் தொடர்பில் இருந்ததாகக் கூறி டாக்டர் சுப்பையாவை சஸ்பெண்ட் செய்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
ஏபிவிபி எனப்படும் ஆர்எஸ்எஸின் மாணவர் அமைப்பின் தலைவராக இருந்தவர் மருத்துவர் சுப்பையா சண்முகம். சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி மருத்துமனையில் புற்றுநோய் துறை தலைவராக இருந்த சுப்பையா, கடந்த 2020ஆம் ஆண்டு, தான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள மூதாட்டி ஒருவது வீட்டு வாசலில் நின்று சிறுநீர் கழித்த சர்ச்சையில் சிக்கினார். இதுகுறித்த புகார் தொடர்பாக அண்மையில் கைது செய்யப்பட்ட அவர் தற்போது ஜாமீனில் வெளியே உள்ளார்.
முன்னதாக தஞ்சையில் பள்ளி மாணவி லாவண்யா மரணத்திற்கு நீதி கேட்டு பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபியை சேர்ந்தவர்கள் சென்னை தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் அ,மைந்துள்ள முதலாமைச்சர் மு.க.ஸ்டாலினின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட மாணவர்களை, சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் துறையின் தலைவராக இருந்த மருத்துவர் சுப்பையா நேரில் சென்று சந்தித்துப் பேசினார்.
இதனையடுத்து மருத்துவர் சுப்பையா, செயல் அரசு ஊழியருக்கான நடத்தை விதிகளை மீறியதாகவும், அரசியல் இயக்கங்களுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த உத்தரவை மருத்துவக் கல்வி இயக்குநர் மற்றும் சுகாதார துறை செயலாளர் பிறப்பித்திருந்தனர். பின்னர் இந்த உத்தரவை எதிர்த்து மருத்துவர் சுப்பையா சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணையின்போது, சுப்பையா ஏபிவிபி எனும் மாணவர் சங்கத்தின் தலைவராக 2017 முதல் 2020 வரை பதவி வகித்துள்ளதாகவும், இந்த இயக்கம் அரசியல் அமைப்பு அல்ல என்றும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. அப்போது லாவண்யா தற்கொலை குறித்து அரசியல் ரீதியான கருத்துக்களை ட்விட்டரில் சுப்பையா பதிவிட்டதாகவும், அவர் மீது துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கிருஷ்ணகுமார், டாக்டர் சுப்பையா சஸ்பெண்ட் செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தார். மேலும் ஒழுங்கு நடவடிக்கை குறித்த துறைநீதியான விசாரணையை 12 வாரங்களில் முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.