அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.120 அதிகரிப்பு..
தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ. 120 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன் 37 , 640 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை உயர்வதும், குறைவதும் வழக்கமான ஒன்றுதான். அந்தவகையில் கடந்த மாதத்தின் மத்தியில் தொடர் சரிவை சந்தித்து சவரன் ரூ. 37,000க்கும் கீழ் குறைந்து விற்பனையான தங்கம் விலை இன்று ரூ. 38 அயிரத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இம்மாத தொடக்கத்தில் தங்கம் விலையானது சரிவுடன் விற்பனை செய்யப்பட்டது. அதாவது கடந்த சனிக்கிழமை சவரனுக்கு ரூ.50 குறைந்து ரூ.37,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனையடுத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை சந்தை விடுமுறை என்பதால் விலையில் மாற்றமில்லை.
இந்நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று தங்கத்தின் விலை எதிர்பாராத வகையில் மீண்டும் உயர்வை கண்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.37,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் கிராமுக்கு ரூ.15 அதிகரித்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,705-க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசுகள் உயர்ந்து ரூ.62.50 காசுகளுக்கு விற்பனையாகி வருகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 62,500 க்கு விற்பனை செய்யப்படுகிறது.