எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு - நாளை மறுநாள் விசாரணை
அதிமுக பொதுக்குழுவில் ஏற்கனவே கொண்டு வரப்பட்ட 23 தீர்மானங்களை தவிற மற்ற தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு வருகிற புதன்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது.
அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை உச்சகட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 23ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக அறிவிக்க அவரது ஆதரவாளர்கள் திட்டமிட்டிருந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் சென்னை நீதிமன்றத்தை நாடி அதனை தடுத்துவிட்டார். பொதுக்குழு நடைபெறுவதற்கு முந்தைய நாள் நள்ளிரவு வரை நடைபெற்ற விசாரணையில், ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட 23 தீர்மானங்களை தவிற மற்ற தீர்மானங்களை நிறைவேற்ற கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியது.
இதனால் 23ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் எடப்பாடி நினைத்தது நிறைவேறவில்லை. இதன் காரணமாகவே அன்று ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பொதுக்குழுவில் அவமதிக்கப்பட்டனர். இதனையடுத்து ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரே கிடையாது எனவும், அவரின் பதவி காலாவதியாகிவிட்டது எனவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், வருகிற 11ம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் தன்னை பொதுச்செயலாளராக அறிவிக்கும் முயற்சியில் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டு வருகிறார். இதற்காக எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார். 23 தீர்மானங்களை தவிர பிற தீர்மானங்களை நிறைவேற்ற உயர்நீதிமன்றம் விதித்திருக்கும் தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில், அந்த வழக்கு வரும் புதன்கிழமை அவசர வழக்காக விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.