என்.எல்.சியில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு..
என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் பொறியாளர், மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் என்.எல்.சி இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதள முகவரிக்குச் ( www.nlcindia.in) சென்று விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் அமைந்துள்ளது என்.எல்.சி எனப்படும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம். காமராசர் காலத்தில் இந்த என்.எல்.சி உருவாக்குவதற்காக 30 கிராம மக்கள் தங்களது நிலங்களை அரசுக்கு தாரை வார்த்துக் கொடுத்தனர். அப்போது என்.எல்.சி அமைக்க நிலம் கொடுத்தவர்கள் மற்றும் அவர்களது வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று உறுதிமொழி அளிக்க்கப்பட்டது. இந்நிலையில் அண்மையில் என்.எல்.சியில் தமிழர்கள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டு, வட மாநிலத்தவர்கள் 100% பணியமர்த்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் இதற்கு கணடனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு வந்தனர். இந்நிலையில் தற்போது மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் உள்ளிட்ட பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கி அதற்கான அறிவிப்பை என்.எல்.சி இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது. பொறியாளர், மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு மொத்தம் 222 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தப் பணியிடங்களுக்கான தகுதி, வயது வரம்பு, விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள் உள்ளிட்ட விவரங்கள் வருகிற 25 ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.