2024-ல் நாடாளுமன்ற தேர்தலுடன், சட்டமன்ற தேர்தல் வர வாய்ப்பிருக்கிறது - கடம்பூர் ராஜூ
2024-ல் நாடாளுமன்ற தேர்தலுடன், சட்டமன்ற தேர்தல் வர வாய்ப்புள்ளதாகவும், அப்போது களத்தில் திமுகவினர் இல்லாமல் போவார்கள் என்றும் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இனாம்மணியாச்சி ஊராட்சிக்கு உட்பட்ட கிருஷ்ணாநகரில் மன்னார்சாமி நகர் 1, 2, 4-வது தெருக்களில் பேவர் பிளாக் மற்றும் வாறுகால் அமைக்கும் பணிக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.36.74 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த பணிகள் தொடக்கம் விழா நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: தமிழகத்தில் 66 உறுப்பினர்களுடன் வலுவான எதிர்கட்சியாக அதிமுக செயல்பட்டு வருகிறது. அதிமுக எதிர்கட்சி தலைவரின் கருத்துக்களை விமர்சிப்பதாலேயே அமைச்சர் தங்கம் தென்னரசுவின் செய்தி பத்திரிகைகளில் வருகிறது. அவர் அதிமுகவுக்கு தான் நாளும் பொழுதும் பதில் அளித்து வருகிறார். இதிலிருந்து அதிமுகவை பார்த்து திமுக பயப்படுகிறது என்று அர்த்தம். 2024-ல் நாடாளுமன்ற தேர்தலுடன், சட்டமன்ற தேர்தல் வர வாய்ப்பிருக்கிறது. அப்போது களத்தில் அவர்கள் இல்லாமல் போவார்கள். பாஜகவுடன் அதிமுக இணைக்கமாக இருந்தாலும் கொள்கை ரீதியாக முரண்பாடுகள் உள்ளன. அந்த முரண்பாடுகள் எங்களுக்கு மட்டுமல்ல. தமிழக மக்களுக்கு எதிரான உள்ள முரண்பாடுகளை அவர்கள் நீக்கிக்கொள்ள வேண்டும் என்ற கருத்தை தான் பொன்னையன் தனது அனுபவத்தின் வாயிலாக சொல்லியிருக்கிறார். அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் எதிரான கருத்தை அவர் கூறவில்லை. தமிழ்நாட்டின் நிலைக்கு ஏற்ப பாஜக தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என நல்ல ஆலோசனையை தான் அவர் வழங்கி உள்ளார் என கூறினார்.