சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் - மேலும் காவலை நீட்டித்த இலங்கை நீதிமன்றம்!!
யாழ்ப்பாணம் சிறையில் உள்ள நாகை, காரைக்கால் மீனவர்கள் 22 பேரின் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாகை, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்வது வழக்கம் . கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் தொடர்ந்து எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்வதுடன், அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்து வருகிறது. கைது செய்யப்படும் மீனவர்கள் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்படுகின்றனர். இலங்கை அரசின் அச்சுறுத்தல் நடவடிக்கையை உடனடியாக கைவிட கைவிட வேண்டுமென்று தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் கடந்த 22ம் தேதி நாகை கீச்சாங்குப்பம் சேவாபாரதி குடியிருப்பை சேர்ந்த சின்னதுரை ,சிவபாரதி, சௌந்தர்ராஜன், பிரகாஷ் ,செல்வம், செல்வநாதன், ரத்தினசாமி, அய்யப்பன், முருகேசன் உள்ளிட்ட 9 மீனவர்களும், காரைக்கால் துறைமுகத்தில் இருந்து 13 மீனவர்களும் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற நிலையில் , எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர், 22 மீனவர்களையும் கைது செய்தது. நாகை மாவட்ட மீனவர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டு மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர் . இதையடுத்து அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர் . இதைத்தொடர்ந்து காரைக்கால் துறைமுகத்தில் இருந்து சென்ற 13 மீனவர்களும் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர் . ஒரே நாளில் 22 மீனு தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டது மீனவ சங்கத்தினர் மத்தியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நாகை மற்றும் காரைக்கால் பகுதியை சேர்ந்த 22 மீனவர்களின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 24ஆம் தேதி கைது செய்யப்பட்ட 22 மீனவர்கள் நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில், அவர்களுக்கு வருகிற 23-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து இலங்கை ஊர் காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.