பிரபல 10 ரூபாய் டாக்டர் அசோகன் மரணம் - பொதுமக்கள் அதிர்ச்சி
சிதம்பரத்தை சேர்ந்த பிரபல 10 ரூபாய் டாக்டர் அசோகன் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த பிரபல டாக்டரான அசோகன், சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதியில் மருத்துவம் பார்த்து வந்தார். வெறும் 10 ரூபாய்க்கு மக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தார். சிதம்பரம் நகரத்தில் மட்டுமல்லாமல், சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்தும் ஏராளமான மக்கள் இவரிடம் மருத்துவம் பார்த்துள்ளனர். கொரோனா காரணமாக பல்வேறு மருத்துவமனைகள் மூடப்பட்ட போதிலும் கூட இவர் தனது மருத்துஅமனையை மூடாமல் பொதுமக்களுக்கு சேவை செய்து வந்தார். வாடகை கட்டிடத்தில் மருத்துவமனை நடத்தி வந்தாலும் கூட 10 ரூபாய் மட்டுமே வாங்கிக் கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார்.
இந்நிலையில் மருத்துவர் அசோகனுக்கு நேற்று மாலை திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். டாக்டர் அசோகன் உயிரிழந்த செய்திய கேட்ட சிதம்பரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும் அப்பகுதி பொதுமக்கள் ஒன்றாக திரண்டு, டாக்டர் அசோகன் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.