பிரபல எழுத்தாளார் சுந்தர ராமசாமியின் பிறந்தநாள் இன்று ..
எழுத்துத் துறையில் பல்வேறு புனைப்பெயர்களைக் கொண்ட பிரலப எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் 92வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
நாகர்கோவில் அருகேயுள்ள மகாதேவர் கோவில் எனும் கிராமத்தில் 1931 ஆம் ஆண்டு பிறந்தவர் சுந்தர ராமசாமி.. குழந்தை பருவத்தை தந்தையின் பணிச்சூழல் காரணமாக கேரளாவில் கழித்த அவருக்கு , 8 வயது இருக்கும்போது மீண்டும் சொந்த ஊரான நாகர்கோவிலுக்கே அவரது குடும்பத்தும் வந்துவிட்டது. தமிழை தாய்மொழியாக கொண்டிருந்தாலும், அவருக்கு சிறுவயதிலேயே மலையாளம் கற்பிக்கப்பட்டதால் இரு மொழிகளிலும் வல்லவரானார். இளமைக் காலத்தில் அதாவது அவரது 18 வது வயதில் தான் தமிழை எழுத்துக் கூட்டி படிக்கவே தொடங்கினார். ஆனால் சரியாக 3 ஆண்டுக்குள் தமிழில் கதைகளையே எழுதத் தொடங்கிவிட்டார்.
ஆரம்பக் காலத்தில் சாந்தி எனும் இதழில் கதைகளை எழுதி வந்த அவர், ‘முதலும், முடிவும்’, ‘தண்ணீர்’, `அக்கரைச் சீமையிலே', `பொறுக்கி வர்க்கம்', `கோயில் காளையும் உழவு மாடும்' ஆகிய கதைகளை எழுதினார்.. அதேபோல் சரஸ்வதி எனும் இதழில், `கைக்குழந்தை', `அகம்', `அடைக்கலம்', `செங்கமலமும் ஒரு சோப்பும்', `பிரசாதம்', `சன்னல்', `லவ்வு', `ஸ்டாம்பு ஆல்பம்', `கிடாரி', `சீதைமார்க் சீயக்காய்த்தூள்' ஆகிய கதைகளை எழுதினார். அத்துடன் மலையாளத்தில் வெளியான ``தோட்டியின் மகன்’ `செம்மீன்’ ஆகிய நாவல்களை தமிழில் மொழி பெயர்ப்பு செய்தார்.
ஒரு கதை என்பது எதையாவது எழுதி வைப்பது என்பதல்ல.. அதிலுள்ள வார்த்தைகளில் வாசிப்பவர்களை வாழ வைப்பது.. அந்த கதை ஏற்படுத்தும் தாக்கம் காலம் முழுவதும் நிலைத்து நிற்க வேண்டும்... அப்படியான ஒரு படைப்புதான் சுந்தர ராமசாமியின் ‘ஒரு புளியமரத்தின் கதை’ எனும் நாவல்.. இந்த நாவலுக்குப் பிறகு 6 ஆண்டுகள் தனிப்பட்ட பிரச்சனை காரணமாக இடைவெளி எடுத்துக்கொண்டார். அதன்பிறகு புது உத்வேகத்துடன் 'ஜே.ஜே. சில குறிப்புகள்’, ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ போன்ற நாவல்களைப் படைத்தார். அத்துடன் ‘காலச்சுவடு’ என்ற காலாண்டு இதழையும் ஆரம்பித்தார்..
குமரன் ஆசான் நினைவு விருது, இயல் விருது, கதா சூடாமணி விருது உள்ளிட்ட பல விருதுகளை உரித்தாக்கிய சுந்தர ராமசாமி 2005-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 74-வது வயதில் காலமானார். கவிதைகளில் ‘பசுவய்யா’வாகவும், கதைகளில் சு.ராவாகவும், சுந்தர ராமசாமியாக இதழியலிலும் வாசகர்களால் அறியப்பட்ட சுந்தர ராமசாமியின் 92 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.