வீட்டின் முன்பு திரண்ட ரசிகர்கள் : புத்தாண்டு வாழ்த்து கூறிய ரஜினி..
புத்தாண்டை முன்னிட்டு தனது வீட்டின் முன்பு கூடியிருந்த ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் வாழ்த்து தெரிவித்தார்.
புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் என எந்த பண்டிகைகள் வந்தாலும், ரஜினியின் பிறந்தாளின்போதும் அவருக்கு வாழ்த்து தெரிவிக்க ஏராளமான ரசிகர்கள் ரஜினியின் வீட்டின் முன்பு திரண்டுவிடுவது வழக்கம்.. அவர்களை சந்தித்து ரஜினிகாந்தும் வாழ்த்துக்களை பெற்று கொண்டும், வாழ்த்துக்களை தெரிவித்தும் வருவார். இந்நிலையில் இன்று ஆங்கில புத்தாண்டை ஒட்டி, காலை முதலே ஏராளமான ரசிகர்கள் அவரது வீட்டின் முன்பு ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்க காத்திருந்தனர்.
அப்போது ரசிகர்களைக் காண நடிகர் ரஜினிகாந்த் வீட்டிலிருந்து வெளியே வந்தார். கேட்டுக்கு முன்பாகவே உள்பக்கம் இருந்தவாறே நாற்காலி மீது ஏறி நின்று ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து கை அசைத்து வணக்கம் சொல்லி ரசிகர்களின் வாழ்த்துக்களையும் ஏற்றுக்கொண்டார். ரஜினி, ரசிகர்களை சந்தித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. முன்னதாக தனது ட்விட்டர் பக்கத்தில், “அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டிருந்தார்.