சாகும் வரை உண்ணாவிரதம்.. ஒரு பிடி மண்ணைக்கூட எடுக்க விட மாட்டோம் - அண்ணாமலை

 
Annamalai

அன்னூரில் தொழிற்பேட்டை  அமைக்க அரசு நில ஆர்ஜித பணியை தொடங்கினால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  

கோவை மாவட்டம் அன்னூரில் தமிழக அரசு சார்பில் விளைநிலங்களில் தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து  விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  அவர்களது  போராட்டத்திற்கு  ஆதரவு தெரிவித்து, பாஜக  மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  அப்போது பேசிய  அவர், “விவசாயம் செய்யும் பெண் பணியை விடுத்து பசியுடனும் வயிற்றெரிச்சலுடனும் தரையில் அமர்ந்து யோசிக்க தொடங்கினால், கோட்டை உள்பட என்ன மாற்றங்கள் நடக்க வேண்டுமோ, அவை அனைத்தும் நடக்கும்.

போராட்டம் அறிவிப்பு

நாங்கள் ஏற்கெனவே ஒரு முறை விவசாயிகளை சந்தித்துச் சென்றோம். இதை அறிந்து தமிழக அரசு தொழிற்பேட்டை அமைக்கும் நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்திவைத்தது. சில நாட்களுக்கு பின் மீண்டும் அன்னூர், மேட்டுப்பாளையம் பகுதிகளில் 3,862 ஏக்கர் நிலம் சிப்காட் தொழிற்பேட்டை திட்டத்துக்கு ஆர்ஜிதம் செய்ய அரசாணை வெளியிட்டுள்ளது.   தொழிற்பேட்டை அமைக்கப்பட உள்ள நிலத்தில் வெங்காயம், வாழை, மஞ்சள், புதினா உள்ளிட்ட பல விளைபொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தமிழகத்தில் தொழிற்சாலைகளுக்காக 48,195 ஏக்கர் ஒதுக்கீடு செய்துள்ளதாக அரசாங்க குறிப்பில் உள்ளது. கையகப்படுத்தப்பட்ட நிலம் பயன்படுத்தப்படாமல் உள்ளது.
 அண்ணாமலை - ஸ்டாலின்
பிரதமர் மோடி தலைமையிலான அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் 2021-ம் ஆண்டில் இந்தியாவில் அந்நிய முதலீடு கணிசமாக உயர்ந்துள்ளது. தொழிற்பேட்டை அமைக்க தரிசு நிலங்கள் வேண்டும் என்றால் தமிழக அரசு தூத்துக்குடி, திருநெல்வேலி, கரூர், பெரம்பலூர் பகுதிகளில் திட்டங்களை செயல்படுத்தலாம்.  எதிர்ப்பை மீறி அன்னூரில் தொழிற்பேட்டை அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டால் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன். ஒரு பிடி மண்ணைக் கூட எடுக்க விட மாட்டோம். ” என்று தெரிவித்தார்.