சாலை தடுப்பு சுவரில் மோதி அப்பளம் போல் நொறுங்கிய கார் - பெண் ஐடி ஊழியர் பலி

 
accident

சென்னை அருகே பள்ளிக்கரணையில் சொகுசு கார் ஒன்று சாலை தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஐடி ஊழியர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினியரான கிருத்திகா, சென்னையை அடுத்த துரைப்பாக்கம் பகுதியில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கி பணிபுரிந்து வந்தார். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் நேற்று காலை கிருத்திகா தன்னுடன் பணியாற்றும் கொளத்தூர் பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் (26), அபிஷா (23), பங்கஜ் (19) ஆகியோருடன் சொகுசு காரில் சென்னையை சுற்றிப்பார்க்க  சென்றார். காரை ஸ்ரீதர் ஓட்டினார். அவருக்கு அருகில் பங்கஜும், பின் இருக்கையில் கிருத்திகா, அபிஷா ஆகியோரும் அமர்ந்து பயணம் செய்தனர். 

துரைப்பாக்கம்-பல்லாவரம் 200 அடி ரேடியல் சாலையில் துரைப்பாக்கத்தில் இருந்து பல்லாவரம் நோக்கி அதிவேகமாக சென்று கொண்டிருந்த போது, பள்ளிக்கரணை குப்பை கிடங்கு அருகே திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர தடுப்புச் சுவரில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரின் கதவுகள் தானாக திறந்து கொண்ட நிலையில், பின்னால் அமர்ந்து இருந்த கிருத்திகா காரில் இருந்து கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார். இதேபோல் மற்ற மூன்று பேரும் காயம் அடைந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பள்ளிக்கரணை போலீசார் மூவரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், காரில் இருந்து தூக்கி வீடப்பட்டு படுகாயமடைந்த கிருத்திகா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.