தேமுதிக அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தலில் தீ விபத்து!!
தேமுதிக அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோடைக்காலம் தொடங்கியது முதலே அரசியல் கட்சிகள் தண்ணீர் பந்தல் அமைக்க கட்சி நிர்வாகிகளுக்கும் ,தொண்டர்களுக்கும் வேண்டுகோள் விடுத்தது. இதன் காரணமாக திமுக, அதிமுக ,தேமுதிக ,மதிமுக, பாமக, பாஜக என தமிழக அரசியல் கட்சிகள் சார்பில் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டு மக்களின் தாகம் தீர்க்கப்பட்டு வருகிறது.
அதன்படி சென்னை கோயம்பேடு நூறடி சாலையில் அமைந்துள்ள தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் சில நாட்களுக்கு முன்பு தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது. இங்கு நேற்று நள்ளிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. அவ்வழியாக வந்த மர்மநபர் ஒருவர் தண்ணீர் பந்தலுக்கு தீ வைத்துவிட்டு தப்பி சென்றதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த கோயம்பேடு பேருந்து நிலைய போலீசார் தீப்பற்றிய பகுதியை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இருப்பினும் தண்ணீர்பந்தல் முழுவதுமாக எரிந்து நாசமானது.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீ வைத்த மர்ம நபர் யார்? என்பது குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் தேமுதிக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.