தமிழக மீனவர் மீது துப்பாக்கிசூடு - இந்திய கடற்படை மீது வழக்குப்பதிவு!!
தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேர், காரைக்காலைச் சேர்ந்த 3 பேர் என 10 மீனவர்கள் தங்களது விசைப்படகில் நடுக்கடலில் இன்று மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது, ஐ.என்.எஸ் பங்காரம் என்ற கப்பலில் பாதுகாப்புப் பணியிலிருந்த இந்தியக் கடற்படையினர், இம்மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில், வீரவேல் என்ற மீனவரின் மீது குண்டு பாய்ந்து, அவர் பலத்த காயங்களுடன் தற்போது மதுரை அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சை பெற்று வருகிறார்.
தமிழக மீனவர்கள் மீது இந்தியக் கடற்படையினர் நடத்தியுள்ள துப்பாக்கிச் சூடு குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியப் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் இந்தியக் கடற்படையினரே இதுபோன்ற செயல்களில் ஈடுபடும்போது அது அடித்தட்டில் வாழும் மீனவர்களிடையே நம்பிக்கையின்மையும், பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்துவதாக அமைகிறது.
எனவே, இந்த விஷயத்தில் உடனடியாகத் தலையிட்டு, இந்திய கடற்பகுதியில் மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களை, இந்திய பாதுகாப்பு முகமையினர் மிகுந்த எச்சரிக்கையுடனும், நிதானத்துடனும் கையாளுவதற்கு உரிய அறிவுரைகளை வழங்குமாறு முதலமைச்சர், கேட்டுக் கொண்டுள்ளார். இந்நிலையில் தமிழக மீனவர் மீது துப்பாக்கி சூடு நடத்திய இந்திய கடற்படை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வேதாரண்யம் மரைன் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலை முயற்சி பிரிவின் கீழ் இந்திய கடற்படை வீரர்கள் மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.