#Breaking ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருவரும் கட்சியை அழிக்க திட்டமிட்டுள்ளனர் - முன்னாள் எம்.எல்.ஏ ஆறுகுட்டி
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் குறித்து தனது ஆதரவாளர்களுடன் நான்காவது நாளாக ஓ.பன்னீர்செல்வம் இன்று ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். சென்னையில் ஓபிஎஸ் இல்லத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், மைத்ரேயன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி, "தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ்- ஈபிஎஸ் சண்டையிட்டுக் கொள்வது சரியல்ல. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை தொண்டர்களை கேட்டா ஏற்படுத்தினார்கள்? அதிமுகவிலிருந்து ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஒதுங்கிக்கொள்ள வேண்டும். ஓபிஎஸ்-ஈபிஎஸ் பதிலாக வேறு யாராவது அதிமுக பொதுச் செயலாளராக வந்தால் பரவாயில்லை. ஓபிஎஸ் - ஈபிஎஸ் இரண்டு பேருமே ஒரு விபத்தின் காரணமாக பதவிக்கு வந்துவிட்டார்கள்;இருவருமே பதவியிலிருந்து ஒதுங்கி மற்றவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "நீதான் முதல்வர் என்று கைகாட்டி பதவி கொடுத்தவர் சசிகலா. அவரைக் கேவலமாக பேசலாமா? அதிமுக இப்பொழுது ஜாதி கட்சியாக மாறி வருகிறது. ஜெயலலிதா இருந்தால் இப்படி நடந்திருக்குமா?அதிமுகவின் ஒற்றை தலைமையாக யார் வேண்டுமானாலும் வரலாம்; நான் கூட வரலாம். ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருவரும் சண்டையிட்டு கொள்வதால் கட்சி உடையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. கோஷ்டிப் பூசலால் அதிமுகவை அழிக்க இருவரும் திட்டமிட்டுள்ளனர்" என்றார்.