முன்னாள் அதிமுக எம்.பி. மறைவு - ஈபிஎஸ் இரங்கல்!!
அதிமுக முன்னாள் எம்.பி. ராதாகிருஷ்ணன் நேற்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 67. கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட இவர் வெற்றி பெற்றார். அதிமுகவில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு பதவிகள் வகித்த வந்த இவர் தற்போது விருதுநகர் மேற்கு மாவட்ட துணை செயலாளராக பணியாற்றி வந்தார். இந்த சூழலில் நேற்று திடீர் மாரடைப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராதாகிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவுக்கு அதிமுக நிர்வாகிகளும் ,தொண்டர்களும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இதுகுறித்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், "விருதுநகர் மேற்கு மாவட்டக் கழக துணைச் செயலாளரும், விருதுநகர் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான திரு. T. ராதாகிருஷ்ணன் அவர்கள் மாரடைப்பால் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.
கழகத்தின் மீதும், தொடர்ந்து கழகத் தலைமையின் மீதும், மிகுந்த விசுவாசம் கொண்டு பணியாற்றி வந்த ஆரம்பகால கழக உடன்பிறப்பு திரு. ராதாகிருஷ்ணன் அவர்கள், விருதுநகர் மாவட்டக் கழகச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் கழகப் பணிகளை ஆற்றியுள்ளார். அதே போல், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினராகவும், சிவகாசி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவராக 3 முறை தேர்ந்தெடுக்கப்பட்டும் சிறந்த முறையில் மக்கள் பணிகளை ஆற்றியவர்.
கழகப் பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு அரும்பணி ஆற்றி வந்த அன்புச் சகோதரர் திரு. ராதாகிருஷ்ணன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு இந்தத் துயரத்தைத் தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் அளிக்க வேண்டும் என்றும், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதிபெறவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.