மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா பேருந்து டோக்கன்.. 27 மையங்களில் பணிகள் தீவிரம்..
சென்னை மாநகர் போக்குவரத்து கழக பஸ்களில் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு கட்டணமில்லா பேருந்து டோக்கன்கள் வழங்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சென்னை மாநகர பேருந்துகளில் மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்ய டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மாதத்திற்கு 10 டோக்கன்கள் வீதம் 6 மாதங்களுக்கு ஒரு முறை இந்த டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில் . 2023ம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை அடுத்த அரையாண்டிற்கான டோக்கன்கள் இன்று (டிச21) முதல் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. அதன்படி, 6 மாதங்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள், அடையாள அட்டை புதுப்பித்தல், புதிய பயனாளிக்கு வழங்குதல் ஆகிய பணிகள் இன்று தொடங்கியது. இதற்காக சென்னையில் உள்ள 27 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, அடையாறு, பெசன்ட் நகர், திருவான்மியூர், மந்தைவெளி, தி.நகர், சைதாப்பேட்டை, சைதாப்பேட்டை பஸ் நிலையம், மத்திய பணிமனை, சென்ட்ரல் பஸ் நிலையம், பிராட்வே, குரோம்பேட்டை, பல்லாவரம், ஆலந்தூர், கிண்டி எஸ்டேட், அய்யப்பன்தாங்கல், வடபழனி, கே.கே.நகர், ஆதம்பாக்கம், வேளச்சேரி, அண்ணாநகர், கோயம்பேடு, அம்பத்தூர் எஸ்டேட், அம்பத்தூர் ஓ.டி., ஆவடி, அயனாவரம், வில்லிவாக்கம், தண்டையார்பேட்டை, சுங்கச்சாவடி, எண்ணூர், வியாசர்பாடி, எம்.கே.பி.நகர், மாதவரம், பாடியநல்லூர், செங்குன்றம், தாம்பரம் மெப்ஸ் பஸ் நிலையம், பூந்தமல்லி, பெரம்பூர் பஸ் நிலையம், வள்ளலார் நகர், செம்மஞ்சேரி, திருவொற்றியூர் ஆகிய 27 மையங்களில் டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது.
ஜனவரி 31-ந்தேதி வரை காலை 8 மணி முதல் இரவு 7.30 மணி வரை இந்த டோக்கன்கள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் பிப்ரவரி 1-ந்தேதி முதல் அந்தந்த பணிமனைகளில் அலுவலக நேரத்தில் டோக்கன்கள் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மூத்த குடிமக்கள், கட்டணமில்லா பயண டோக்கன்கள் மற்றும் டோக்கன் வாங்க புதியதாக அடையாள அட்டை பெறுவதற்கு இருப்பிட சான்றாக குடும்ப அட்டையின் நகலுடன், வயது சான்றாக ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், கல்வி சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டையின் நகல் மற்றும் 2 பாஸ்போர்ட் அளவிலான ஃபோட்டோ ஆகியவற்றை சமர்பித்து பெற்றுக்கொண்டனர். மேலும், சம்மந்தப்பட்ட ஆவணங்களை சரிபார்க்க ஏதுவாக அவற்றின் அசல் சான்றிதழ்களையும் காண்பித்து டோக்கன்களை பெற்றுச் சென்றானர்.